இந்துக்களின் புனித நூலாகக் கருதப்படும் பகவத் கீதையை அவதூறாகத் தாம் பேசவில்லை என்று நடிகர் விஜய் சேதுபதி, தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 'டிஜிகாப்' என்ற செயலியின் தொடக்கவிழாவில் விஜய் சேதுபதி அந்தச் செயலி பற்றி அவர் கூறியிருந்த வாக்கியம் ஒன்றுடன் அந்நடிகர் திரைப்படம் ஒன்றில் சீருடை அணிவதைக் காட்டும் படம் ஒன்றை இணைத்து 'நியூஸ்7தமிழ்' செய்தித்தளம் வெளியிட்டது.
அடையாளம் தெரியாத சிலர் செயலியைப் பற்றிய விஜய் சேதுபதியின் வாசகத்தை அகற்றி, இந்துக்களைப் புண்படுத்தும் விதமாகப் பகவத் கீதையை தரக்குறைவாகப் பேசும் வாசகத்தை நுழைத்தனர்.
இதனை உண்மை என நம்பி ஆத்திரமடைந்த சமூக ஊடக பயனீட்டாளர்கள் விஜய் சேதுபதியைக் கண்டித்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் அந்நடிகர், "என் அன்பிற்குரிய, மக்களுக்கு பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலைப் பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாகப் பேசியதும் இல்லை, பேசவும் மாட்டேன். சமூக விரோதிகள் சிலர் பரப்பிய அவதூறான செய்தி இது. எந்தச் சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்துகொள்ளமாட்டேன்," என்று தமது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.