தேசிய தொழிநுட்பப் பல்கலைக் கழக தமிழ் இலக்கிய மன்றமும் அதன் முன்னாள் மாணவர் சங்கமும் பொங்கல் திருநாளை முன்னிட்டு 'பொங்கட்டும் ஆனந்தம் 2019' எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தன. சமூக சேவையோடு துடிப்பான கலைவிழாவாகவும் அமைந்த அந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று மகிழ்ந்தனர். "தமிழர் திருநாள் ஆகிய பொங்கல் விழா, நமக்கு உணவா தாரம் வழங்கும் சூரியனுக்கும் விவசாயிகளுக்கும் நன்றி செலுத்தும் முக்கியமான நாள். அந்நாளில் நம்மை வாழவைக்கும் சமூகத்திற்கும் நன்றி செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சமூக சேவையில் ஈடுபட முடிவெடுத்தோம்," என்று கூறினார் என்டியூ தமிழ் இலக்கிய மன்றத்தின் துணைத் தலைவர் திரு அருண்ராஜ் சிதம்பரம்.
இம்மாதம் 12ஆம் தேதி காலையில் 'செங்ஹுவா' சமூக மன்றத்தில் இந்த இளையர்களின் சமூக சேவை தொடங்கியது. வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 25 பிள்ளைகளை இந்திய மரபுடைமை நிலையத்தைச் சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றனர் மாணவர்கள். அங்கு பொங்கல் நன்னாளைப் பற்றி அவர்களுக்கு விளக்கம் அளித்ததுடன், பொங்கல் தொடர்பான நடவடிக்கைகளிலும் பிள்ளைகளை ஈடுபடுத்தி மாணவர்கள் மகிழ்வித்தனர்.
"உணவும் மற்ற அத்தியாவசியத் தேவைகளும் எளிதாக கிடைக்கும் சிங்கப்பூரில், விவசாயிகளின் உழைப்பைப் பற்றி சிந்தித்துப் பார்க்க சிறுவர்களுக்கும் பங்கு பெற்ற பல்கலைக்கழக மாணவர் களுக்கும் இந்நிகழ்ச்சி ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது," என்று தெரிவித்தார் திரு அருண்ராஜ். மாலையில் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் கலைநிகழ்ச்சி இடம்பெற்றது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம், நன்யாங் தொழிநுட்பப் பல் கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழக மாணவர்களும் இந்தக் கலை நிகழ்ச்சியில் ஆடிப் பாடி மகிழ்ந்ததுடன் வந்திருந் தோரையும் மகிழ்வித்தனர். அத்துடன் மூன்று பல்கலைக் கழக தமிழ் மன்றங்களின் தலைவர்களும் ஒன்றாகச் சேர்ந்து பொங்கல் வைத்தனர்.
"பலதரப்பட்ட இளைர்களை ஒன்று சேர்த்து தமிழர் என்ற அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்கள் முக்கிய நோக்கமாகும்," என்று கூறினார் திரு அருண்ராஜ். அடுத்து வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார் என்டியூ தமிழ் இலக்கிய மன்றத்தின் முன்னாள் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த திரு சுந்தர் பிலவேந்தர்ராஜ், 29.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், தேசிய தொழிநுட்பப் பல்கலைக் கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங் களின் மாணவர்கள் இணைந்து படைத்த பொங்கல் கலைநிகழ்ச்சி.