தெலூக் பிளாங்கா உணவங்காடி நிலையத்தில் இன்று காலை மூண்ட தீச்சம்பவத்தால் குறைந்தது 12 கடைகள் பாதிக்கப்பட்டன. அந்தக் கடைகளின் எரிவாயு இணைப்புத் துண்டிக்கப்பட்டது.
11 தெலூக் பிளாங்கா கிரசண்ட்டில் ஏற்பட்ட தீச்சம்பவத்திற்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை காலை 9.08 மணிக்கு விரைந்ததாகக் கூறியது.
உணவங்காடி நிலையத்தின் கடை ஒன்றில் உணவுச் சட்டிச் சூட்டின் மிகுதியால் தீ ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. எவருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படவில்லை.
சம்பவ இடத்திற்கு முதலில் சென்ற தீயணைப்பாளர் தண்ணீர் கொண்டு தீயை அணைக்கும்போது தீ மேலும் அதிகமாகப் பரவியதால் தீயணைப்பான் உள்ளிட்ட மாற்று முறைகளில் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்.
பின்னர் வந்த தீயணைப்பாளர்கள் அவருக்கு உதவி செய்தனர் என்று குறிப்பிடப்பட்டது.
பொரித்த மீன் வகை உணவுகள் விற்கும் கடையில் கடைக்காரர் எண்ணெய்யைச் சூடாக்கியபோது இந்த விபத்து நடந்ததாகக் கூறப்பட்டது.