'டீம் கேட்டரிங்' நிறுவனம் தயாரித்த உணவை உண்டு கிட்டத்தட்ட 180 பேர் நோய்வாய்ப்பட்டதாகக் கூறும் அறிவிப்பு ஒன்றை தேசிய சுற்றுப்புற வாரியம் தனது இணையப்பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் 19ஆம் தேதி டீம் கேட்டரிங் சமைத்த உணவைச் சாப்பிட்ட பிறகு அவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவை ஏற்பட்டன. 'டீம் கேட்டரிங்' நிறுவனம், தனது சொந்த இடமான பிடோக் நார்த் ஸ்திரீட் 5ல் உள்ள ஷிமேய் ஈஸ்ட் சமையலறையில் அந்த உணவைத் தயாரித்தது.
சம்பவத்தை விசாரித்த தேசிய சுற்றுப்புற வாரியம், பின்னர் 'டீம் கேட்டரிங்' நிறுவனத்தின் தரநிலையை 'சி'க்குக் குறைத்ததாகக் கூறியது. இந்தத் தரநிலை 12 மாதங்களில் மறுஆய்வு செய்யப்படும் என்றும் அதுவரை 'டீம் கேட்டரிங்' தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் வாரியம் தெரிவித்தது.