இயக்குநர் சிவகார்த்திக் இயக்கத்தில் சாண்டி, மானசா நடிக்கும் படம் 'பலசாலி'. "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள். அதாவது புத்திசாலித்தனம் தான் உண்மையான ஆயுதம் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி இது. ஒருவனுடைய பலத்தை நிர்ணயிப்பது அவனுடைய நேரமும் சமயோசித அறிவும்தான். இதை சுந்தர்.சி பட பாணியில் முழுக்க முழுக்க நகைச்சுவையாகச் சொல்லும் படம் தான் 'பலசாலி'. "பலமே இல்லாத ஒரு ஆள் எப்படி தன்னை விட பலசாலிகளை தனது புத்திசாலித்தனத்தால் வீழ்த்துகிறான் என்பதை வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையோடு சொல்கிறோம்.
"பொதுவாக இதுமாதிரியான படங்களில் கோழையான நாயகனை பின்பகுதியில் வீரனாக்குவது போல் கதை இருக்கும். ஆனால் என் படத்தில் ஆரம்பம் முதல் கடைசி காட்சி வரை கதை நாயகன் சாதாரண ஆளாகத்தான் இருப்பான். ஆனால் அவன் எதிர்த்து வெல்வது எல்லாமே அவனைவிட பலசாலியான ஆட்கள் தான். சண்டைக்காட்சிகள் கூட வயிறு வலிக்க சிரிக்க வைப்பதாக இருக்கும்," என்கிறார் இயக்குநர் சிவகார்த்திக்.