தேனி: விருதுநகரில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி மூட்டைகள் லாரியில் கடத்தப்படுவதாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் பாலகுரு தலைமையில் அதிகாரிகள் தேனி மாவட்டத்தில் முக்கிய சந்திப்புகளில் நேற்று முன்தினம் இரவு முதல் சோதனை நடத்தி வந்தனர். இதன் பயனாக நேற்று காலை சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில் கிட்டத்தட்ட 4 டன் அளவிற்கு ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அதனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் பின்னர் விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்பில் விருதுநகரைச் சேர்ந்த கருப்பையா (வயது38), தேனியைச் சேர்ந்த ராஜேவேல், கம்பத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இந்த அரிசி மூட்டைகள் கேரளாவிற்கு கடத்திக் கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. இந்த அரிசியை எந்த ரேஷன் கடைகளில் இருந்து இவர்கள் வாங்கி வந்தனர் என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் போலிசார்.