காலாங் ஆற்றில் நேற்றுக் காலை மிதந்த 60 வயது மாதுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிட விரும்பாத வழிப்போக்கர் ஒருவர் பெண்டமியர் சாலை புளோக் 38A அருகே தனது காலை மெதுநடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஆற்றில் மிதந்த உடலைக் கண்டதாகத் தெரிவித்தார்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குக் காலை 7.11 மணிக்குத் தகவல் கிடைத்ததாக அதன் பேச்சாளர் சொன்னார். சிவப்பு கோடிட்ட டி-சட்டை அணிந்த அந்த மாது சம்பவ இடத்திலேயே மாண்டது உறுதி செய்யப்பட்டது. நேற்றுக் காலை 9.20 மணிக்கு போலிஸ் அதிகாரிகள் சற்று வீங்கியிருந்த மாதுவின் உடலைப் பரிசோதனை செய்தனர்.
பணி ஓய்வு பெற்ற 67 வயது ரிச்சர்ட் லிம் தனது மெதுநடைப் பயிற்சியின்போது போலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தில் கூடியிருப்பதைப் பார்த்ததாகத் தெரிவித்தார். அந்தக் குடியிருப்புப் பேட்டையில் அதிகமான மூத்த குடிமக்கள் வசித்து வருவதாகவும் கடந்த சில மாதங்களில் அங்கே இரண்டு தற்கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்ததாவும் அவர் விவரித்தார். இயற்கைக்கு மாறான மரணம் என்று இதை வகைப்படுத்தி போலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.