மணிலா: சுசுகிக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் நடப்பு வெற்றியாளரான தாய்லாந்தைக் கண்டு தமது குழு அஞ்சவில்லை என்று சிங்கப்பூர் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் வி. சுந்தரமூர்த்தி கூறியுள்ளதாக Goal.com இணையத்தளம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 4 மணிக்கு மணிலாவில் நடைபெறும் ஆட்டத்தில் தாய்லாந்துடன் சிங்கப்பூர் வீரர்கள் மோதுகின்றனர். போட்டியை ஏற்று நடத்தும் பிலிப்பீன்ஸைக் கடந்த சனிக்கிழமை இரவு சந்தித்த சிங்கப்பூர், கோல் ஏதுமின்றி சமநிலை கண்டது.
ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் தப்பாட்டம் காரணமாக சிங்கப்பூரின் ஹஃபிஸ் சுஜாட் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து 10 பேருடன் விளை யாடியபோதிலும் தனது வலிமைமிக்க தற்காப்பு அரணால் சிங்கப்பூர் குழு கோல் ஏதும் விடாமல் ஒரு புள்ளி பெற்றது. மற்றோர் ஆட்டத்தில் இந்தோனீசியாவை 4-2 எனும் கோல் கணக்கில் தாய்லாந்து வீழ்த்தியது.
செய்தியாளர் கூட்டத்தில் தாய்லாந்தின் பயிற்றுவிப்பாளருடன் சுந்தரம் (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்