சமூக ஊடக நிபுணத்துவர்களுக்குத் தேவை அதிகரித்து வருகிறது. இந்தத் தேவையை நிறைவேற்றும் வகையில் ரிபப்ளிக் பலதுறை தொழிற்கல்லூரி ஒரு புதிய சிறப்பு பட்டயப் படிப்பைத் தொடங்கியிருக்கிறது. 'சமூக ஊடகத் தொடர்பு உத்தித்துறை சிறப்புப் பட்டயம்' என்று குறிப்பிடப்படும் அந்தப் புதிய படிப்பு ஓராண்டு தொடர்கல்வி, பயிற்சி செயல்திட்டமாக இருக்கும். இத்தகைய படிப்பை உள்நாட்டு பலதுறை தொழிற்கல்லூரி இப்போதுதான் முதல்முறையாகப் போதிக்கிறது.
புதிய படிப்பு 2017 ஏப்ரலில் தொடங்கும். முதலில் 30 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இந்தத் தொழிற்துறையின் குறிக்கோள்களை நிறைவேற்றக்கூடிய வகையில், சமூக ஊடகத்தைக் கூடினபட்சமாக எப்படி மேம்படுத்த முடியும் என்பது பற்றிய அறிவு, ஆற்றலுடன் கூடிய பட்டதாரிகளை உருவாக்குவது இந்தச் செயல்திட்டத்தின் நோக்கம். புதிய படிப்பு, ஸ்கில்ஃபியூச்சர்ஸ் இயக்கத்தையொட்டி இடம்பெறுவதாக இந்தத் தொழிற்கல்லூரி அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.