முஹம்மது ஃபைரோஸ்
கால்முட்டி அறுவை சிகிச்சைக்குப் பின் ஃபேரர் பார்க் மருத்துவமனையிலிருந்து திரு புண்ணியமூர்த்தி இன்று வீடு திரும்புவதாக இருந்தது. ஆனால் நேற்று அவரது நல்லுடல்தான் வீட்டிற்கு வரும் என்று எவரும் எதிர்பார்க் கவில்லை. திடீரென்று மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டு திரு புண்ணியமூர்த்தி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இந்திய சமூகத்தில் பலராலும் நன்கு அறியப்பட்டவர் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் முன்னோடி அதிகாரியான திரு புண்ணியமூர்த்தி. அவரது நல்லுடலுக்கு இறுதி மரியாதை செலுத்த நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், ஊடகக் கலைஞர்கள், குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் எனப் பலதரப்பினரும் வந்திருந்தனர்.
தந்தையின் மரணம் எதிர்பாராதது என்பதால் தமது குடும்பத்தினரால் இன்னும் அவரது மறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றார் திரு புண்ணியமூர்த்தியின் மகன் திரு கார்த்திகேயன். அவர் விமானியாகப் பணி புரிந்து வருகிறார். 2010ஆம் ஆண்டு முதல் அபுதாபி போலிஸ் துறையின் குடிமைத் தற்காப்புப் பிரிவின் ஆலோசகராகப் பணியாற்றிய திரு புண்ணியமூர்த்தி, கால் முட்டி அறுவை சிகிச்சைக்காக அண்மையில் சிங்கப்பூர் வந்திருந்தார்.