இந்தோனீசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் தோல்வியைத் தழுவி சுசுகி கிண்ணக் காற்பந்துப் போட்டியிலிருந்து சிங்கப்பூர் நேற்று முன்தினம் வெளியேறியது. முதல் இரண்டு ஆட்டங்களில் சிங்கப்பூர் குழு தற்காப்பில் அதிகக் கவனம் செலுத்தி வெற்றி பெறாததற்கு சுந்தரத்தை சிலர் குறைகூறும் வேளையில், போட்டியிலிருந்து வெளியேறியது மனவேதனையை அளித்தாலும் தமது வீரர்கள் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.
"வேதனையாக இருக்கிறது. ஒட்டுமொத்த அடிப்படையில் எங்களது வீரர்கள் சிறப்பாக விளையாடினர். கடைசி நிமிடம் வரை அவர்கள் போராடினர். அதிர்ஷ்டம் இருந்திருந்தால் இந்தோனீசியாவை நாங்கள் தோற்கடித்திருக்கலாம்," என்று ஆட்டத்துக்குப் பிறகு சுந்தரம் கூறினார். முதல் ஆட்டத்தில் போட்டியை ஏற்று நடத்தும் பிலிப்பீன்ஸ் குழுவுடன் சிங்கப்பூர் கோல் ஏதுமின்றி சமநிலை கண்டது. அடுத்த ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளர் தாய்லாந்துடன் பொருதிய சிங்கப்பூர், கடைசி நிமிடத்தில் கோல் விட்டு 1-0 எனும் கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.