'தில்லாலங்கடி' திரைப்படம் மூலம் ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்து, விஜய் சேதுபதியின் 'சூது கவ்வும்' திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் ஓரளவு பலமாக கால் பதித்தவர் சஞ்சிதா ஷெட்டி. விரைவில் வெளியாக இருக்கும் 'ரம்' திரைப்படத்திற்காக மிகுந்த உற்சாகத்துடன் காத்துக்கொண்டிருக்கிறார் அம்மணி. இதில் ஹிரிஷிகேஷ், மியா ஜார்ஜ், ஆடுகளம் நரேன், விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
"ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதியக்கூடிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். அந்த வகையில் 'ரம்' படத்தில் நான் ஏற்று நடித்திருக்கும் 'ரியா' கதாபாத்திரம் அனைவரின் பாராட்டுகளையும் பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கிறேன். "விவேக் சார் போன்ற திரையுலகின் மூத்த கலைஞரோடு பணியாற்றியது எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அவரிடம் இருந்து நாங்கள் கற்றுக்கொண்டது ஏராளம். இதுவரை நான் நடித்த ஒன்பது படங்களுமே திறமையான உதவி இயக்குநர்களாலும், குறும்பட இயக்குநர்களாலும் உருவாக்கப்பட்டது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கின்றது," என்கிறார் சஞ்சிதா ஷெட்டி.