காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில் அண்மையில் உற்சவர் சிலை மாற்றப்பட்டது. இதுவே முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு காரணம் என பரவி வரும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான ஏகாம்பரநாதர் கோவிலில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உற்சவர் சிலை இருந்தது. இந்நிலையில் அச்சிலை சேதமடைந்ததாகக் கூறி அதை மாற்ற கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்கு பக்தர்கள் மத்தியில் எழுந்த கடும் எதிர்ப்பையும் மீறி புதிய உற்சவர் சிலை உருவாக்கப்பட்டு அதற்கு கடந்த 5ஆம் தேதி கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது. அன்று தான் ஜெயலலிதா நள்ளிரவில் காலமானார். இதற்கு ஆகம விதிமுறைகளை மீறி சிலையை மாற்றியதே காரணம் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.