சென்னை: இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், தமிழக மீனவர்கள் மீதான, இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். "புதுக்கோட்டை, ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த எட்டு மீனவர்கள் இரு படகுகளில் சனிக்கிழமையன்று பாக் நீரிணைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படை அவர்களைத் தாக்கி உள்ளது.
இதில் அவர்கள் பலத்த காயமடைந்தனர். "இதுபோல், ஏற்கெனவே 15 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டதோடு அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன," என முதல்வர் பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டி உள்ளார். இவ்விஷயத்தில் பிரதமர் உடனடியாகத் தலையிட்டு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், கைதான மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் பன்னீர்செல்வம் தமது கடிதத்தில் மேலும் கோரியுள்ளார்.