மதுரை: தமிழகம் முழுவதும் சீமைக்கருவை மரங்களை அகற்றக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கடந்த ஆண்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத் திருந்தார். இந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட 13 மாவட்ட ஆட்சியர்களும் எதிர்மனு தாரர்களாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள், "13 மாவட்டத் தலைநகரங் களிலும் சாலை ஓரங்கள், நீர்நிலைகள், காலிமனைகள், தனியார் நிலங்கள் போன்ற பகுதிகளில் இருக்கும் சீமைக் கருவை மரங்களை உடனடியாக அகற்றி அது தொடர் பான அறிக்கையை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஜனவரி 10ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்," என்று உத்தரவிட்டனர். அதேபோல சீமைக்கருவை மரங்களை அகற்றுவது தொடர்பாக மதுரை மாநகராட்சியின் முன்னாள் மேயர் எம்.பட்டுராஜன் மற்றும் திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தாக்கல் செய்திருந்த மனுக்கள் தொடர்பாகவும் தகுந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர்.