சென்னை: சென்னையில் ஜெயலலிதா வசித்து வந்த வேதா நிலையத்துக்கு காவல்துறையினர் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த காரணத்தால் அவர் பாதுகாப்புக்காக 240 காவல் துறையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகும் 240 காவல் துறையினரும் போயஸ் கார்டன் இல்லத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதால் பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்தன.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினும் 'போயஸ்கார்டன் வீட்டுக்கு இன்னமும் ஏன் காவல் துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்' என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து நேற்று முதல் அங்கு பாதுகாப்புக் குறைக்கப் பட்டு உள்ளது. நான்கு காவல் துறையினர் மட்டுமே அங்கு நிறுத்தப்பட்டு உள்ளனர். அவர்களும் அந்த வழியாகச் செல்லும் பொது மக்களை தடுத்து நிறுத்தவில்லை. எந்தவித கெடு பிடிகளும் செய்வதில்லை. தற்போது போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜன் தங்கியுள்ளார்.