மணிலா: பிலிப்பீன்ஸ் நாட்டின் பெரும் பகுதியை சூறையாடிய 'நாக்-டென்' எனும் புயலுக்கு குறைந்தது 6 பேர் பலியானதாகவும் இன்னும் 18 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். வழக்கத்திற்கு மாறாக டிசம்பர் மாதக் கடைசியில் வீசிய இப்புயல் முதலில் கிறிஸ்துமஸ் தினத்தன்று பிலிப்பீன்சின் கிழக்குக் கடலோர மாநிலங்களைத் தாக்கியது. பிலிப்பீன்சின் தென்கிழக்குப் பகுதியான அல்பே மாநிலத்தை புரட்டிப்போட்ட புயல் காற்று மணிக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதாகக் கூறப் பட்டது.
பலத்த காற்றுடன் கனமழையும் தொடர்ந்து பெய்த தால் சாலைகளிலும் பண்ணைகளிலும் வெள்ளநீர் தேங்கியது. சாலையில் சென்றுகொண்டிருந்த லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் தலைகீழாகச் சாய்ந்த தாகவும் வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் அடித்துச்செல்லப்பட்ட தாகவும் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்ததாகவும் பிலிப்பீன்சின் பேரிடர் நிவாரணக் குழு தெரிவித்தது. அடித்த காற்றில் பல மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின்சார விநியோகம் தடைபட்டதாகவும் இதனால் பல வீடுகள் இருளில் மூழ்கியதாகவும் கூறப்பட்டது.
பிலிப்பீன்சில் வீசிய புயல் காற்றுடன் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் சாலைகளிலும் தெருக்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளநீர் தேங்கியுள்ள தெருக்களைக் கடந்துசெல்ல குடியிருப்பாளர்கள் சிரமப்படுகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்