சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள் அடுத்த ஆண்டு முதல் தங்களுடைய அடையாள அட்டையைப் பதியும்போது, மறுபதிவின்போது அல்லது பாஸ்போர்ட்டிற்கு மனுச் செய்யும்போது, அதைப் புதுப்பிக்கும்போது அவர்களின் கருவிழிப் படலத்தை அதிகாரிகள் படம் எடுத்து பதிந்து கொள்வார்கள். அடையாளச் சரிபார்ப்பு முறைகளை இன்னும் துல்லியமானதாகவும் ஆற்றல் மிக்கதாகவும் ஆக்குவதற்குத் தோதாக இந்தக் கருவிழிப் படங்கள் உதவும்.
குடிமக்கள், நிரந்தரவாசிகளின் கைரேகைகளும் புகைப்படங்களும் ஏற்கெனவே பத்திரங்களில் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்தில் நவம்பர் மாதம் தேசிய பதிவுச் சட்டத்திற்கான திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் ஒரு பகுதியாக கருவிழிப் படங்கள் அடுத்த ஆண்டு முதல் பதியப்படுகின்றன. சிங்கப்பூரின் தரை, கடல் சோதனைச்சாவடிகளில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த ஏற்பாடு படிப்படியாக அமல்படுத்தப்படும். இந்த விவரங்களை நேற்று தெரிவித்த உள்துறை அமைச்சு, தேசிய பதிவுச் சட்ட திருத்தங்கள் ஜனவரி 1 முதல் நடப்பிற்கு வரும் என்றும் குறிப்பிட்டது.