கட்சிப் பதவிக்கு வர வேண்டும் என்று நினைத்திருந்தால் ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே தம்மால் ஏதேனும் பதவியைக் கேட்டுப் பெற்றிருக்க முடியும் என அண்மைய பேட்டியில் சசிகலா கூறியுள்ளார். ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த அப்பேட்டியில் அவர் எத்தகைய கேள்விக்கும் தயக்கமின்றி நிதானமாகவும் பொறுமையாகவும் பதில் அளித்துள்ளதாக பேட்டி கண்ட அப்சரா ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையிலான நட்பு குறித்து மட்டுமே பேட்டி எடுக்க வேண்டும் என்று தாம் நினைத்திருந்ததாகவும், பேட்டியின்போது அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகளையும் கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது என்றும் அப்சரா கூறியுள்ளார். "அரசியல் கேள்விகளுக்கும் சசிகலா அசராமல் பதில் அளித்தார். கட்சிப் பதவிக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால், அக்கா (ஜெயலலிதா) உயிரோடு இருந்தப்போதே பதவியை கேட்டு பெற்றிருக்க முடியும். ஆனால், தற்போது வரை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சியில் இருக்கிறேன்," என்று சசிகலா அந்தப் பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.