கைபேசி இல்லாதோர் யாருமில்லை என்று கூறுமளவுக்கு இன்றைய உலகம் ஆகிவிட்டது. அந்தக் கைபேசி மூலம் தன்னைத்தானே படம் எடுத்துக்கொள்ளும் 'செல்ஃபி' மோகத்தில் பலர் இருப்பதைக் கண்கூடாக நாம் பார்க்கலாம். தனியாக இருக்கும்போது, நண்பர்களுடன் இருக்கும்போது, சாப்பிடும்போது, உடற்பயிற்சி செய்யும்போது 'செல்ஃபி'கள் எடுக்கப்படுகின்றனர். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப 'செல்ஃபி' எடுப்பதையும் ஓர் அளவுடன் வைத்திருந்தால் பிரச்சினை இல்லை.
ஆனால் பேராசையும் அளவுக்கு மீறிய ஆர்வமும் யாரை விட்டது? இதற்கு 'செல்ஃபி' பிரியர்களும் விதிவிலக்கன்று. நண்பர்களிடம் பாராட்டுகளைப் பெறவேண்டும், மற்றவர்கள் எடுக்கும் 'செல்ஃபி'களைவிட ஒரு படி தாண்டி பாராட்டுக் குவிய லைப் பெறும் 'செல்ஃபி'களை எடுக்கவேண்டும் போன்ற காரணத்தினால் அண்மைய காலத்தில் பல அசம்பாவிதங்கள் நிகழ்ந்து வருகின்றன. ரயில்வண்டி சீறி வரும்போது அதன் பத்தக்கதில் நின்று 'செல்ஃபி' எடுப்பது, கொடிய மிருகங்களுக்கு அருகில் சென்று சீக்கிரமாக 'செல்ஃபி' எடுப்பது,
மிக உயரமான இடத்திலிருந்து 'செல்ஃபி' எடுப்பது போன்ற ஆபத்தான காரியங்களில் பலர் ஈடுபடுகின்றனர். ஆசைப்பட்டு செய்யும் இந்த காரியங்கள் துரதிஷ்டவசமாக சோகக் கதையில் முடிவதுண்டு. ரயில்வண்டி வருகையில் அதனுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள தமது கைபேசியைக் கையில் வைத்துக்கொண்டு ஆசையோடு காத்திருந்தோர் பலர் அந்த ரயில்வண்டியாலேயே மோதப்பட்டு நசுங்கி உயிரிழந்த உண்மைச் சம்பவங்கள்தான் எத்தனை.
புதுமையான 'செல்ஃபி'களை எடுத்து பாராட்டுகளைப் பெறவேண்டும் என்ற அளவுக்கு மீறிய ஆர்வத்தினால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களில் பலர் ஈடுபடுவது இப்போது வாடிக்கையாகிவிட்டது. படம்: இணையம்