தளவாடத் துறையில் முழுநேர வேலை செய்துகொண்டே கல்விச் சான்றுகளைப் பெறும் திட்டத்தின் முதல் மாணவர்கள் நேற்று தங்கள் நிறைவுச் சான்றிதழ்களைப் பெற்றனர். தளாவாடத் துறையில் கற்றுக் கொண்டே ஊதியம் பெறும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தை (இஎல்பி) ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்புடன் சேர்ந்து ரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி நடத்தியது. 25 பங்காளித்துவ நிறுவனங்களில் மாணவர்கள் வேலைப் பயிற்சி பெற திட்டம் உதவியது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இந்த ஓராண்டுத் திட்டத்தில் மொத்தம் 35 மாணவர்கள் பங்கேற்றனர். வாரத்திற்கு ஒரு நாள் படித்துக்கொண்டு மற்ற நாட்களுக்கு வேலை பார்க்க வழி வகுத்த இத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் அனைவரும் விநியோகக் கட்டமைப்பு நிர்வாகத் துறையில் சிறப்புப் பட்டயத்தை நேற்று பெற்றனர். பட்டயம் பெற்ற 35 மாணவர்களில் 33 மாணவர்கள் தாங்கள் பயிற்சி பெற்ற எஸ்டி லோஜிஸ்டிக்ஸ், யூசென் லோஜிஸ்டிக்ஸ் போன்ற பிரபல நிறுவனங்களிலேயே பணியைத் தொடர்வார்கள்.