மலாக்காவில் கோலா லிங்கி அனைத்துலக துறைமுகத்தின் (கேஎல்ஐபி) விரிவாக்கப் பணிகள் அடுத்த 10 ஆண்டு களுக்குள் முடிவடையும் என்பதால் சிங்கப்பூர் பொருளியல் மீது அதன் தாக்கத்தைக் கண்டறிவது இப்போதைக்கு சிரமம் என்று போக்குவரத்து மூத்தத் துணை அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சக்தியாண்டி சுபாட் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், கேஎல்ஐபி துறைமுகத்தை யும் வட்டார மேம்பாடுகளையும் அரசாங்கம் அணுக்கமாக கவனிக்கும் என்றும் போட்டித்தன்மையைத் தக்கவைக்க கூடுதல் நடவடிக்கைகளை அது எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
எண்ணெய் சேகரிப்பு, நிரப்பும், பழுதுபார்ப்பு சேவைகளை 12.5 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய அந்தத் துறைமுகம் வழங்கும். மிகப் பெரிய எண்ணெய் கப்பல்களைக் கையாள 620 ஏக்கர் பரப்பளவு கொண்ட மீட்கப்பட்ட நிலப்பகுதியைக் கொண்டு 1.5 மில்லியன் கன மீட்டர் எண்ணெய் சேகரிப்பு கொள்ளளவு, கப்பற்பட்டறை ஆகியவற்றை உள்ளடக்கும் துறைமுக கட்டுமானப் பணிகளை கேஎல்ஐபி துவங்கியது. மேலும், கேஎல்ஐபி துறைமுக விரிவாக்கப் பணியில் கொள்கலன்களைக் கையாளும் வர்த்தகம் இடம்பெறாததால், அது சிங்கப்பூரின் துறைமுகம் மீது மிகக் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தும். என்றாலும், சிங்கப்பூர் திருப்தி யடைந்துவிடக் கூடாது என்றும் நாட்டின் துறைமுகம் போட்டித்தன்மைமிக்கதாக இருப்பதை உறுதிசெய்ய திரு சுபாட்டின் கேள்வி தகுந்த நேரத்தில் வந்ததாகவும் திருவாட்டி டியோ சொன்னார்.