ஸுரிக்: உலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் (ஃபிஃபா) இவ்வாண்டுக்கான ஆகச் சிறந்த கோல் விருதை மலேசிய ஆட்டக்காரரான ஃபயிஸ் சுப்ரி வென்றுள்ளார். 'பெஸ்ட் ஃபிஃபா' காற்பந்து விருது 2016 விழாவில் 'புஸ்காஸ்' விருது பிரிவில் அவருக்கு இந்த விருது சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை வழங்கப்பட்டது. இந்த விருதைக் கைப்பற்றிய முதல் ஆசியர் எனும் பெருமை ஃபயிஸ் சுப்ரியைச் சேரும் என்பது குறிப் பிடத்தக்கது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதியன்று பாஹாங் குழுவுக்கு எதிரான மலேசிய சூப்பர் லீக் ஆட்டத்தில் பினாங்குக்காக விளையாடிய ஃபயிஸ் சுப்ரி பிரம்மாண்டமான முறையில் கோல் போட்டார். பினாங்கு மாநிலத்தின் தலைநகரான ஜார்ஜ்டவுனில் உள்ள சிட்டி விளையாட்டரங்கத்தில் இந்தச் சாதனை கோல் போடப்பட்டது. எதிரணியின் கோல் கம்பத்திலிருந்து 35 மீட்டர் தொலை விலிருந்து கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பைப் பயன்படுத்தி பந்தை வலைக்குள் ஃபயிஸ் சுப்ரி அனுப்பினார்.
பந்தை வலைக்குள் சேர்ப்பது பாராட்டுக்குரியது. ஆனால் ஃபயிஸ் சுப்ரி போட்ட கோல் இதையும் தாண்டி அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. அவரது காலிலிருந்து புறப்பட்டுச் சென்ற பந்து முதலில் எதிரணி கோல்காப்பாளரின் வலது பக்கமாக வளைந்து சென்று கண்ணி மைக்கும் நேரத்தில் திடீரென அவரது இடது பக்கத்துக்குச் சுழன்று வலையைத் தொட்டது. ஆகச் சிறந்த கோல் பிரிவில் ஃபயிஸ் சுப்ரியின் கோலுக்கு ஆக அதிகமாக 59.46 விழுக்காடு கிடைத்தது. பிரேசிலின் மார்லோன் போட்ட கோல் 22.86 விழுக்காட்டுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இந்த விருது வழங்கும் விழாவின் நேரடி ஒளிபரப்பைக் காண கெடா மாநிலத்தைச் சேர்ந்த கிராமம் ஒன்றில் இருக்கும் ஃபயிஸ் சுப்ரியின் வீட்டில் ஏறத்தாழ 200 பேர் நேற்று அதிகாலை திரண்டனர்.
அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் அபாரமான கோலைப் போட்ட பினாங்கு குழுவின் ஃபயிஸ் சுப்ரிக்கு ஃபிஃபாவின் ஆகச் சிறந்த கோல் விருது வழங்கப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்