தமிழ்நாட்டின் முதல்வராகிறார் வி.கே.சசிகலா 60 வயதாகும் சசிகலா, நாளை அல்லது வியாழக்கிழமை அன்று பதவியேற்க இருப் பதாகக் கூறப்படுகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அதிமுகவின் சட்டப் பேரவைக் குழு தலைவராக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவராக சசிகலாவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வழிமொழிந்தனர். தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தமது பதவி விலகல் கடிதத்தை சசிகலாவிடம் கொடுத்தார்.
பின்னர் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேசிய சசிகலா, "பொதுச் செயலாளராக என்னை முதன்முதலாக முன்மொழிந்தவர் ஓ.பன்னீர்செல்வம். என்னை முதல்வராகப் பதவியேற்க வலியுறுத்தியவர் அவர்தான்," என்றார். முன்னதாக போயஸ் தோட்ட இல்லத்தில் முதல்வர் ஓபிஎஸ் சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது. இனி, அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட தற்கான தீர்மானம் ஆளுநரிடம் வழங்கப்படும்.
அதைத் தொடர்ந்து ஆளுநர் சசிகலாவை முதல்வராகப் பதவியேற்க அழைப்பு விடுப்பார். இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி எம்.எல்.ஏ.வாக பதவி வகிக்காத ஒருவர் ஆறு மாதங்கள் வரை ஒரு மாநிலத்தின் முதல்வராகப் பதவி வகிக்கலாம். அந்த ஆறு மாத காலத்திற்குள் அவர் ஏதாவது ஒரு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பெரும்பாலும் தென்தமிழகத்தில் உள்ள தொகுதியில் அவர் போட்டியிடுவார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று நடந்த கட்சிக்கூட்டத்தில் பச்சை சேலை கட்டி வந்த சசிகலா, அவர் பக்கத்தில் பதவி விலகிய பன்னீர்செல்வம். படம்: சதீஷ்