புதுடெல்லி: நாடாளுமன்ற மேல் சபையில் அதிபர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, மன்மோகன்சிங் ஆகியோர் குறித்து மிகவும் தரக்குறைவாகப் பேசியதாகவும் தொடர்ந்து மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதால் மோடியைப் புறக்கணிக்கப்போவதாகவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறும்போது, "பிரதமர் பதவியில் தலைக்கனம் பிடித்த ஒருவர் அமர்ந்திருப்பது வருத்தமானது. தொடர்ந்து அவரது அலுவலகத்தில் வார்த்தைகளைக் கவனமாகக் கையாளும்படி கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. அந்தப் பதவிக்குரிய மரியாதையைக் குறைக்கும் விதமாக மோடி பேசுகிறார். அவரது அரசியல் விவாதங்கள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. எனவே நாங்கள் பிரதமரைப் புறக்கணிப்போம், அவர் பேசுவதைக் கவனிக்கப்போவதில்லை," என்றார்.