பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை பாவனாவின் திருமணம் திட்டமிட்டபடி அடுத்த மாதம் நடைபெறும் என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர். மிஷ்கினின் 'சித்திரம் பேசுதடி' படத்தில் அறிமுகமான பாவனா, தற்போது தமிழில் படங்கள் இல்லாததால் மலையாளம், தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பாவனாவின் முன்னாள் வாகன ஓட்டுநரும் இன்னும் சிலரும் அவரை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தனர். இதுதொடர்பாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து இயக்குநர் பிரியதர்ஷன், "பாவனாவின் வாகன ஓட்டுநரே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டார் என்பது மிகப்பெரிய குற்றம்.
நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு நபரே இதுபோன்று நடந்துகொண்டால் நாட்டில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்கமுடியும்," என்றார் அவர். இதற்கிடையே இச்சம்பவத்திற்குப் பிறகு பாவனாவின் வருங்கால கணவர் அவருக்கு உறுதுணையாக உள்ளார் என்றும் பாவனாவை திருமணம் செய்துகொள்ளும் அவரது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத் தயாரிப்பாளர் ஒருவருக்கும் பாவனா வுக்கும் ஏற்கெனவே நிச்சயதார்த்தம் நடந்தது. எனவே இவர்களது திருமணத்தை ஏற்கெனவே திட்டமிட்டபடி அடுத்த மாதம் நடத்தப் போவதாக பாவனாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.