கோலாலம்பூர்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய முனையம் 2 பாதுகாப்பானதே என்று மலேசியா தெரிவித்துள்ளது. வடகொரியத் தலைவரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம் கோலாலம்பூர் விமான நிலைய முனையத்தில் காத்திருந்த போதுதான் கொலை செய்யப் பட்டார். அவரைக் கொலை செய்வதற்கு நரம்புகளைப் பாதிக்கும் 'விஎக்ஸ்' எனப்படும் நச்சுத் தன்மையுள்ள ரசாயனப் பொருள் பயன்படுத்தப் பட்டிருப்பது தெரியவந்துள்ளது என்று மலேசிய போலிசார் கூறினர். கிம் ஜோங் நாமின் முகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை சோதனை செய்ததில் இது தெரிய வந்ததாக போலிசார் கூறினர்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2ல் போலிஸ், அணுசக்தி உரிமக் கழகம், தீயணைப்பு மீட்புப் படை ஆகியவற்றின் அதிகாரிகள் பாதுகாப்பு உடை அணிந்து நச்சுத்தன்மைமிக்க ரசாயனப் பொருள் ஏதேனும் காணப்படுகிறதா என்பதை சோதனை செய்கின்றனர். படம்: பெர்னாமா