அப்பர் சிராங்கூன் ரோடும் ஹவ்காங் அவென்யூ 3ம் சந்திக் கும் இடத்தில் நேற்று அதிகாலை சுமார் 4.30 மணிக்குத் தண்ணீர்க் குழாய் உடைத்துக்கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதைச் சரிப்படுத்துவதற்காக சாலையில் இரண்டு தடங்கள் மூடப்பட்டதாக பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது. இதற்கிடையே, அந்தச் சாலையில் இரண்டு பேருந்து நிறுத்தங்களைத் தனது பேருந்துச் சேவைகள் தவிர்த்துக் கொண்டதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் டுவிட்டரில் கூறியது. தண்ணீர்க் குழாய் உடைந்ததால் சாலையில் தண்ணீர் புகுந்து அதன் ஒரு பகுதியை மூடிவிட்டது. அங்கு இருக்கும் நடையர் சாலை கடப்பிடத்திலும் தண்ணீர் வழிந்து ஓடியது. குழாய் உடைப்பு எல்லாம் நேற்று மாலைக் குள் சரியாகிவிடும் என்று கழகம் தெரிவித்திருந்தது.
அப்பர் சிராங்கூன் ரோடு, ஹவ்காங் அவென்யூ 3 சந்திப்பில் தண்ணீர்க் குழாய் ஒன்று உடைத்துக்கொண்டது. படம்: ஷின் மின்