புதுடெல்லி: 'இப்போதைக்கு இந்தியாவின் சிறந்த பேட்மிண்டன் வீராங்கனை நான்தான்' என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறார் கடந்த ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கதைக் கைப்பற்றிய பி.வி.சிந்து (படம்). இந்தியத் தலைநகரில் நடைபெற்று வரும் இந்தியப் பொதுவிருதுப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் சிந்து 21-16, 21-20 என்ற நேர் செட்களில் உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனையும் சக நாட்டவருமான சாய்னா நேவாலைத் தோற்கடித்தார்.
போட்டி முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய சிந்து, "ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் இது ஒரு நல்ல ஆட்டம்தான். இரண்டாவது செட்டில் 20-19 என சாய்னா முன்னிலையில் இருந்தபோதும்கூட வெற்றி பெற முடியும் என்று நான் நம்பினேன்.
"சாய்னா-சிந்து என்பது புதிய மோதல் அல்ல. ஆனாலும் களத்தில்தான் நாங்கள் எதிரிகள், வெளியில் வழக்கமான நண்பர்களைப் போலத் தான்! சாய்னாவுக்கு எதிராக வெற்றி பெறுவதை சிறப்புக்குரியதாக நான் நினைக்கவில்லை. எதிராளி யாராக இருந்தாலும் என்னுடைய முழுத் திறனையும் காட்டி விளையாடுவேன்," என்று சிந்து கூறினார்.