கோலா குபு பாரு: மலேசியாவில் உள்ள வடக்கு=தெற்கு நெடுஞ் சாலையில் நேற்று காலை நிகழ்ந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். வட திசை நோக்கிச் செல்லும் சாலையில் தஞ்சோங் மாலிம் நுழைவாயிலுக்கு அருகில் விபத்து நிகழ்ந்தது. கனரக வாகனம் ஒன்று கட்டுப்பாடு இழந்து அந்த ஆறு பேர் பயணம் செய்துகொண்டிருந்த கார் மீது மோதியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே மாண்டனர். "காலை 7.40 மணிக்கு நிகழ்ந்த விபத்தில் ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர். இறந்தவர்கள் அனைவரும் உறவுக்காரர்களா என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தி வருகிறோம்," என்று உலு சிலாங்கூர் போலிஸ் படைத் தலைவர் ஆர். சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இறந்தவர்கள் 13லிருந்து 76 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விபத்தின் காரணமாக மிகவும் மோசமாகச் சேதமடைந்த காரிலிருந்து மரணமடைந்தோரின் உடல்களை வெளியே எடுக்க நீண்ட நேரம் போராடிய மீட்புப் பணியாளர்கள். படம்: தி ஸ்டார் நாளிதழ்