மாஸ்கோ: சிரியா மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதல் சட்டவிரோதமானது என்றும் அமெரிக்காவின் இந்தச் செயல் இரு நாடுகளுக்கு இடையே போர் மூள வழிவிடக்கூடும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது. சிரியாவில் அதிபர் ஆசாத்தின் படையினர் சில நாட்களுக்கு முன்பு அப்பாவி மக்கள் மீது நடத்திய நச்சுவாயுத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 80 பேர் கொல்லப்பட்டதையடுத்து அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிரியா மீது அமெரிக்கா ஏவுகணைகளை வீசித் தாக்கியது. சிரியா விமானத்தளம் மீது அமெரிக்க போர் விமானங்கள் 59 ஏவுகணைகளை வீசித் தாக்கியதில் 6 பேர் கொல்லப்பட்டதாக அந் நாட்டு ராணுவம் தெரிவித் துள்ளது. அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதலுக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா தன்னிச்சையாக மேற்கொண்ட அத்தாக்குதல் அமெரிக்கா-ரஷ்யா உறவை முற்றாக சீர்குலைத்து விட்டதாக ரஷ்யப் பிரதமர் மெட்விடேவ் கூறியுள்ளார்.
சிரியாவில் உள்ள விமானத் தளம் மீது அமெரிக்கா ஏவுகணைகளை வீசித் தாக்கியதைத் தொடர்ந்து அந்த இடத்தை சிரியா ஆயுதப் படைத் தலைவரும் மற்ற உயர் அதிகாரிகளும் பார்வையிட்டனர். அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். விமானத்தளத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. படம்: ஏஎஃப்பி