தீ விபத்து காரணமாக மூடப்பட்ட சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் நேற்று அதிகாலை 3 மணிக்கு வழக்கநிலைக்குத் திரும்பியது. அதைத் தொடர்ந்து, அதிகாலை 5.40 மணிக்கு சென்னைக்கு 6E54 என்ற இண்டிகோ விமானம் அந்த முனையத் திலிருந்து முதலாவது விமானமாகப் புறப்பட்டது என்று சாங்கி விமான நிலையம் தனது ஃபேஸ்புக் பக்கம் மூலம் தெரிவித்தது. அந்த விமானத்தில் புறப்பட்ட பயணி களில் இந்தியாவைச் சேர்ந்த 21 வயது அவ்னீஷ் மேத்தாவும் ஒருவர்.
ஐந்து நாள் விடுமுறைக்காக சிங்கப்பூர் வந்திருந்த திரு அவ்னீஷ், "இப்போது எல்லாம் சரியாகிவிட்டதால் மகிழ்ச்சி அடைகிறேன். விமான நிலை யத்தில் தீப்பிடித்ததும் அது இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதும்கூட எனக்குத் தெரியாது," என்றார். தீச்சம்பவத்தால் ஏற்பட்ட சிரமங் களுக்காக வருத்தம் தெரிவித்த சாங்கி விமான நிலையம், அந்த இக்கட்டான தருணத்தில் பொறுமைகாத்த பயணி களுக்கும் நன்றி தெரிவித்தது. அந்த முனையத்தில் இருந்த சில கடைகள் தீச்சம்பவத்தால் பாதிக்கப் பட்டன. அவற்றில் மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள சட்னி மேரி துரித உண வகமும் ஒன்று.
பிரதமர் பாராட்டு பொங்கோல் ஃபீல்டு, சாங்கி விமான நிலைய 2வது முனையம், உட்லண்ட்சில் உள்ள ஒரு கொண்டோமினியம் என ஒரே நாளில் மூன்று இடங்களில் நிகழ்ந்த தீச்சம்பவங்களைத் திறம்படக் கையாண்ட சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சிங்கப்பூர் போலிஸ் படை ஆகிய அமைப்புகளுக்குப் பிரதமர் லீ சியன் லூங் பாராட்டுத் தெரிவித்துள்ளார். "இது பொதுச் சேவை வாரமும்கூட. எல்லாவற்றையும் சரிசெய்து, நமது இல் லங்களும் நாமும் பாதுகாப்பாக இருக்க பொதுச் சேவை அதிகாரிகள் கடுமையாக உழைத்து வருவதை இந்த மூன்று சம்ப வங்களும் நமக்கு நினைவூட்டுகின்றன," என்று திரு லீ கூறியிருக்கிறார்.
சாங்கி விமான நிலைய 2வது முனையம் நேற்று அதிகாலை 3 மணிக்கு வழக்கமான செயல்பாட்டுக்குத் திரும்பியது. காலை 8.30 மணிக்கு அம்முனையத்தின் புறப்பாட்டுக் கூடம் இவ்வாறு காட்சியளித்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்