புக்கிட் பாஞ்சாங்கில் இருக்கும் கடை ஒன்றில் 10 கைத்தொலைபேசிகள் திருட்டுப்போய்விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 4 மணிக்கு அந்தக் கடையின் கண்ணாடிச் சன்னலை உடைத்து யாரோ செல்பேசிகளைத் திருடிவிட்டார்கள். ஜலபாங் ரோட்டில் இருக்கும் கிரீன்ரைடு ஷாப்பிங் சென்டரில் உள்ள மொபைல் 8 என்ற கடையில் திருடப்பட்ட கைத்தொலைபேசிகளின் மதிப்பு சுமார் $12,000 என்று சனிக்கிழமை ஸ்டோம்ப் சமூக வலைத்தளத்தில் முதன்முதலாக தெரிவிக்கப்பட்டது. உடைக்கப்பட்ட கண்ணாடி சுமார் $800 செலவில் சரிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
போலிசில் இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது. புலன்விசாரணை தொடர்வதாக போலிஸ் தெரிவித்துள்ளது. அந்தக் கடை அந்தப் பகுதியில் 10 ஆண்டு காலமாக இயங்கி வருகிறது. ஆனால் இதுவரையில் இத்தகைய சம்பவம் அங்கு நிகழ்ந்ததில்லை என்று கடை ஊழியர் ஒருவர் கூறினார். கடையில் மொத்தம் மூன்று ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். சம்பவம் நிகழ்ந்த நாளன்று கடையில் இருந்த ஊழியர் இரவு சுமார் 10 மணிக்குக் கடையை விட்டுச் சென்றார். அந்தக் கடையில் கண்ணாடியை உடைப்பது இலேசான காரியம் அல்ல என்றும் அதற்கு மிகவும் உறுதியான சுத்தியல் வேண்டும் என்றும் அதுவும் ஓர் அடியில் கண்ணாடி உடையாது என்றும் திரு டான் என்ற ஊழியர் தெரிவித்தார்.