பாரிஸ்: பிரஞ்சு கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜெர்மேன் (பிஎஸ்ஜி) வாகை சூடி கிண்ணம் ஏந்தி உள்ளது. ஆட்டம் முடிய சில வினாடிகளே இருந்தபோது ஆஞ்சே குழுவின் இஸா சிசோக்கா போட்ட சொந்த கோல் பாரிஸ் செயிண்ட் ஜெர்மேனுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது. 1957ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரெஞ்சு கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு ஆஞ்சே குழு தகுதி பெற்றது. ஆட்டம் தொடங்கியதும் பாரிஸ் செயிண்ட் ஜெர்மேன் தாக்குதல்களை நடத்தியது. பிஎஸ்ஜியின் ஏங்கல் டி மரியா அனுப்பிய பந்து ஆஞ்சே தற்காப்பு ஆட்டக்காரர் மீது பட்டு கோல் கம்பத்தை உரசிச் சென்றது. மறுமுனையில் ஆஞ்சேயின் நிக்கலஸ் பெபெ வலை நோக்கி அனுப்பிய பந்து கோல் கம்பம் மீது பட்டு வெளியானது. பிரெஞ்சுக் காற்பந்து லீக்கில் பட்டம் வென்ற மொனாக் கோவைவிட எட்டு புள்ளிகள் குறைவாகப் பெற்றும் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் கடைசி 16 குழுக்களுக்கான சுற்றில் தோல்வியைத் தழுவி போட்டியைவிட்டு வெளியேறியும் இப்பருவத்தில் ஏமாற்றங்களைச் சந்தித்தது பாரிஸ் செயிண்ட் ஜெர்மேன்.
பந்தைத் தமது சொந்த வலைக்குள் இஸா சிசோக்கோ (இடது) போட்டதைக் கண்டு அதிர்ச்சியில் உறையும் ஆஞ்சே ஆட்டக்காரர்கள். கொண்டாட்டத்தில் இறங்கும் பிஎஸ்ஜி வீரர்கள். படம்: ஏஎஃப்பி