சவூதி அரேபியாவில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கியிருந்த வீட்டில் நேற்று முன்தினம் நிகழ்ந்த தீ விபத்தில் பத்து இந்தியர்களும் பங்ளாதேஷியர் ஒருவரும் மாண்டனர். அவர்களில் முருகானந்தன் காளியன் என்ற தமிழரும் ஒருவர். இந்த விபத்தில் மேலும் அறுவர் காயம் அடைந்ததாகவும் அதில் நால்வர் இந்தியர்கள் என்றும் முதற்கட்டத் தகவல்கள் கூறுகின்றன. சன்னல்களே இல்லாத அந்த வீட்டில் குளிரூட்டிச் சாதனத்தில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இவ்விபத்து பற்றி அரசாங்கம் அறிந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக இந்தியத் தூதரக அதிகாரிகள் விபத்து நிகழ்ந்த நஜ்ரன் பகுதிக்கு விரைந்துள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். தங்களது வீட்டுப் பணிப்பெண்ணின் கணவர் அந்தத் தீ விபத்தில் மாண்டுவிட்டதாக எஸ் வித்யா என்ற பெண் அமைச்சர் சுஷ்மாவுக்கு டுவிட்டர் வழியாகத் தகவல் கூறியிருந்தார். "இறந்தவரின் சடலத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர உதவி கிடைக்காமல் தடுமாறி வருகிறோம்," என்று தமது பதிவில் திருவாட்டி வித்யா குறிப்பிட்டிருந்தார். "சம்பவம் குறித்து ஜெட்டாவில் உள்ள இந்தியத் தூதரிடம் நான் பேசினேன். விபத்து நிகழ்ந்த நஜ்ரன் வட்டாரம் ஜெட்டாவில் இருந்து 900 கி.மீ. தொலைவில் இருக்கிறது. கிடைக்கும் முதல் விமானத்தில் தூதரக அதிகாரிகள் நஜ்ரனுக்கு விரைகிறார்கள். நஜ்ரன் ஆளுநருடன் தொடர்பில் இருக்கும் இந்தியத் தூதர் அவ்வப்போதைய நிலவரத்தை எனக்குத் தெரிவித்து வருகிறார்," என்று டுவிட்டர் வழியாக அமைச்சர் கூறியுள்ளார்.