வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) குடியிருப்புப் பேட்டையில் கடந்த வார இறுதியில் குரங்கு ஒன்றின் குறும்புச் செயல்கள் தொடர் பில் புகார் செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, நிலைமையைக் கண்காணிக்க பாசிர் ரிஸ்- பொங்கோல் நகர மன்றத்துடன் இணைந்து வேளாண் உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் செயல்பட்டு வருகிறது. மளிகைக் கடைக்குச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண்ணிடமிருந்து அவர் வாங்கிய முட்டைகளை அந்தக் குரங்கு பறித்துத் தின்றதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது, ஒரு குழந்தையை அது கீறியதாகவும் தெரிவிக்கப்பட்டது. பொங்கோல் வாட்டர்வே சன்பீம் குடியிருப்புப் பேட்டையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஒரு குழந்தையின் தண்ணீர்ப் புட்டியுடன் அந்தக் குரங்கு விளையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டது. விளையாட்டு மைதானத்தில் உள்ள சறுக்குப் பலகையிலும் அது விளையாடுவதைக் காட்டும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
பெண் ஒருவரிடமிருந்து முட்டைகளைப் பறித்து தின்னும் குரங்கு. படம்: ஜோசஃப் டான்