தமிழ்நாட்டை ஆட்சி புரிகின்ற அதிமுகவில் ஆறு மாத கால மணவிலக்கு முறிந்து மறுமணம் நடந்துள்ளது. அதிமுகவை அடக்கியாளும் மாமியார் போல் செயல்பட்டுவந்ததாகக் கூறி சசிகலாவையும் அவரின் கையாள் தினகரனையும் ஓரங்கட்டிவிட்டு எடப்பாடியும் பன்னீர்செல்வமும் கை கோர்த்துக் கொண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி நிறைந்த அமாவாசையன்று இணைந்து இருக்கிறார்கள். இணைந்தவர்கள், அதிமுக கட்சியின் சட்டதிட்டங்களை அடியோடு மாற்றி அமைத்து இருக்கிறார்கள். அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர், அதை ஆலமரம் போல் வளர்த்த செல்வி ஜெயலலிதா இருவருக்கும் பிறகு அந்தக் கட்சி யின் பொதுச் செயலாளர் பதவியை ஏற்க யாருக்குமே தகுதி இல்லை என்று முடிவு செய்து அந்தப் பதவியையே பன்னீரும் எடப்பாடியும் ஒழித்துவிட்டார்கள். அதற்குப் பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டு அந்த நாற்காலிகளில் முறையே பன்னீரும் எடப்பாடியும் அமர்ந்துவிட்டனர்.
இந்நிலையில், அதிமுக கட்சிக்கு இன்னமும் தானே துணைப் பொதுச் செயலாளர் என்பதால் கட்சி தன் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்றும் தன்னிடம் 19 எம்எல்ஏக்கள் இருப்பதால் எடப்பாடி ஆட்சியும் தன்னை நம்பித்தான் இருக்கிறது என்றும் சொல்லிக்கொண்டு ஆளுநரைச் சந்தித்தார். அங்கு ஜம்பம் பலிக்காததால் நீதிமன்றத்தை அணுகி அங்கும் இங்கும் அலைந்து வருகிறார் தினகரன். நீதிமன்றத்துக்கு தினகரன் சென்றதற்கு முன்பே அங்கு காத்திருந்த திமுக அவரை இரு கரம் நீட்டி வரவேற்று அரவணைத்துள்ளது. தினகரன் இந்த அணுகுமுறையில் திமுகவுடன் கைகோத்துள்ளார்.
சட்டமன்றத்தில் எடப்பாடி ஆட்சி தொடரவேண்டுமானால் குறைந்தது 117 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. ஆனால் 100 பேர் கூட ஆட்சிக்கு ஆதரவு இல்லை என்று கூறி வரும் திமுக, பெரும்பான்மையை மெய்ப்பிக்க எடப்பாடிக்கு உத்தரவு பிறப்பிக்கும்படி நீதிமன்றத்தை நாடி இருக்கிறது. வழக்கு அடுத்த மாதம் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட ஓர் அரசியல் சூழல் எற் படும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். தினகரன் எவ்வளவு எம்எல்ஏக்களை துருப்புச்சீட்டுகளாக வைத்துக்கொண்டு செயல்பட்டாலும் முக்கிய எதிர்க்கட்சி யான திமுக எல்லா வியூகங்களையும் அரங்கேற்றினாலும் இப்போதைய அதிமுக ஆட்சி, பெரும்பான்மை இல்லை என்றாலும் தவணைக்காலம் வரை தொடரும் என்பதே அரசியல் நோக்கர்களின் ஆரூடம். ஆட்சியைக் கலைக்க இப்போதைய அதிமுக எஎம்எல்ஏக்கள் யாரும் விரும்பமாட்டார்கள் என்பதே அரசியல் கணக்கு.
இப்படிப்பட்ட ஒரு நிலையில், ஆட்சியைக் கலைக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி, முக்கிய எதிர்க்கட்சி யான திமுகவின் எம்எல்ஏக்கள், தினகரன் எம்எல்ஏக்கள் எல்லாரும் பதவி விலகவேண்டும். அவர்கள் இப்படி செய் வார்களா என்பது சந்தேகம்தான். தமிழகத்தை திமுக 2011 வரை ஐந்து ஆண்டு காலம் ஆண்டபோது சட்டமன்றத்தில் அந்தக் கட்சிக்குப் போதிய பெரும்பான்மை இல்லை. அதை சிறுபான்மை அரசு என்றே ஜெயலலிதா குறிப்பிட்டு வந்தார்.
அந்த திமுக ஆட்சி ஐந்து ஆண்டு காலம் நீடித்ததற்கு அதன் தலைவர்=அப்போதைய முதல்வர் கருணாநிதியின் ராஜதந்திரம் காரணமாக இருந்தது. இப்போதைய அதிமுக தலைவர்கள் அத்தகைய அரசியல் வியூகம் எதையுமே அறியாதவர்கள். இதுநாள்வரை யாரையாவது தொழுது, யாருக்காவது அடிபணிந்து, காலில் விழுந்து அரசியல் நடத்தி வந்திருப்பவர்கள். இப்போது அவர்களை வழி நடத்தும் 'குரு'வுக்கு மாநிலத்தில் மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி பெரியது.
அதிமுக ஆட்சியைக் காப்பாற்ற வேண்டிய ஒரு கடப் பாடு யாரையும்விட தேசிய கட்சியான பாஜகவுக்கு அதிக மாக இருக்கிறது. இதை ஆளும் கட்சியினர் தெரிந்துகொண்டுவிட்டார்கள் என்பதால் தமிழகத்தில் நிர்வாகம் நிலைகுலைந்து, நாள்தோறும் ஆர்ப்பாட்டங் களும் போராட்டங்களும் நடக்கின்றன. ஆனால், எல்லாம் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது தெரியவில்லை. என்றாலும் அதைப்பற்றி எல்லாம் இப்போதைய ஆட்சியாளர் கள் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. இப்படியே போனால், அதிமுக கொடியும் சின்னமும் பன்னீர்=எடப்பாடி தரப்புக்குக் கிடைத்தாலும் அரசியலில் சசிகலா படைபலம் இல்லாத அதிமுக கட்சி அடுத்த தேர்தல்வரைதான் என்றே சொல்லத் தோன்றுகிறது.