ஜப்பானை நேற்று அதிகாலை தாக்கிய 'லான்' சூறாவளியால் பல இடங்களில் நிலச்சரிவும் வெள்ளமும் ஏற்பட்டன. கட்டுமானச் சாரம் சரிந்ததால் அவ்வழியாகச் சென்ற ஆடவர் ஒருவர் உயிரிழந்தார். அதுபோல, படகு கவிழ்ந்ததால் மீனவர் ஒருவரும் நிலச்சரிவு காரணமாக வீட்டை மண் மூடியதால் இன்னொருவரும் மாண்டனர். இன்னும் ஒருவரைக் காணவில்லை. கிட்டத்தட்ட நூறு பேர் வரை காயமடைந்தனர். நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன; ரயில் சேவைகளும் பாதிக்கப் பட்டன. பல இடங்களில் ஆறுகள் கரையை உடைத்துக்கொண்டு ஓடியதால் மீன்பிடிப் படகுகள் நிலப்பகுதியில் தூக்கி எறியப்பட்டன.
கொள்கலன் கப்பல் ஒன்று துறைமுகச் சுவரின் மீது மோத, அதிலிருந்த 19 ஊழியர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தோக்கியோவில் இருந்து 200 கி.மீ. தொலைவிலுள்ள கொரியாமா நகரையொட்டிச் செல்லும் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்நகரில் வசிக்கும் சுமார் 80,000 பேர் தங்களது வீடுகளைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேற்கு ஜப்பானில் பல நூறு வீடுகள் வெள்ளத்தில் மிதப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. சூறாவளி காரணமாக டொயோட்டா நிறுவனம் அங்குள்ள தனது அனைத்து ஆலைகளிலும் காலை நேரப் பணியை நேற்று ரத்து செய்தது. படம்: ராய்ட்டர்ஸ்