லோயாங் கார்டன்ஸ் கொன்டோ மினியத்தில் உள்ள ஒரு வீட்டில் தமது மனைவியைக் கொன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 50 வயது கிருஷ்ணன் ராஜு நேற்று சம்பவ இடத்துக்கு அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். 44 வயது ரத்தின வைத்தின சாமியைக் கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணியிலிருந்து 10.48 மணிக்குள் கிருஷ்ணன் ராஜு கொன்றிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
கிருஷ்ணன் ராஜுவை நேற்று காலை 11.59 மணிக்கு வேன் ஒன்றில் லோயாங் கார்டன்ஸ் கொன்டோமினியத்துக்கு போலி சார் அழைத்துச் சென்றனர். கிருஷ்ணன் ராஜு தப்பிச் செல்லாமல் இருக்க அவரது கால்கள் பட்டைகளால் கட்டப்பட்டிருந்தன. அவரைச் சுற்றி போலிஸ் அதிகாரிகள் இருந்தனர். கொலை நிகழ்ந்த வீட்டுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். கொலை பற்றிய விவரங்களை அங்கு அவர் போலிசாரிடம் விவரித்ததாக நம்பப்படுகிறது. இது ஒரு மணி நேரம் 40 நிமிடங்களுக்கு நீடித்தது. அதனைத் தொடர்ந்து, கிருஷ்ணன் ராஜுவை மீண்டும் அதே வேனில் அதிகாரிகள் அங்கிருந்து கொண்டு சென்றனர்.
கொலை நிகழ்ந்த லோயாங் கார்டன்ஸ் கொன்டோமினியத்துக்கு கிருஷ்ணன் ராஜுவை அழைத்துச் சென்று விசாரணை நடத்தும் போலிஸ் அதிகாரிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்