உலக வரலாற்றில் ஜெருசலம் பல சமயங்களின் புனித நகரமாக பல்லாண்டு காலமாக மதிக்கப்பட்டு வந்திருக்கின்றது. ஆனால், இஸ்ரேல் மட்டும் அது தனக்கு மட்டுமே ஆதிகாலம் முதல் சொந்தம் என்றும் அதுவே தன்னுடைய நிரந்தர தலைநகரம் என்றும் தொடர்ந்து கூறிவந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் திடீரென்று விடுத்த ஓர் அறிவிப்பு உலக சமுதாயத்தினரிடையே வியப்பையும் சினத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஜெருசலத்தை நிரந்தரமாக இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அதிகாரபூர்வமாக தாரைவார்த்துக் கொடுக்கப்போவதாக அது அறிவித்திருப்பதை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இஸ்ரேல் அமெரிக்காவின் நட்பு நாடுதான், அதே வேளையில், பாலஸ்தீனம், அரபு நாடுகளின் ஆதரவையும் இஸ்லாமிய நாடுகளின் ஆதரவையும் பெற்றிருப்பதை உலகத் தலைவர்கள் அறிவார்கள்.
வரலாற்றுக் குறிப்புகளின்படி, 1948ஆம் ஆண்டில் முதலாவது அரேபிய-இஸ்ரேலிய போர் நடந்தபின், ஜெருசலம் மேற்கு ஜெருசலமென்றும் கிழக்கு ஜெருசல மென்றும் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டதை அரசியல் கவனிப்பாளர்கள் குறிப்பிடுவர்.
1967ஆம் ஆண்டு நடந்த ஆறுநாள் போருக்குப் பின் அங்கு ஏற்பட்ட அரசியல் பதற்றங்களும் மாற்றங் களும் எண்ணிலடங்கா. கிழக்கு ஜெருசலத்தில் யூத, இஸ்லாமிய, கிறிஸ்துவ புனிதத் தலங்கள் இருப்பதால் அந்த மரபுகளின் மக்களுக்கும் ஜெருசலம் இன்றியமையாத புனித நகர மாகவே உள்ளது. இதுவரை கட்டிக்காத்த மரபை விடுத்து, ஜெருசலத்தை நிரந்தரமாக இஸ்ரேலின் தலைநகரமென்று அமெரிக்கா அறிவித்தால் அது தேவையற்ற இடர்பாடுகளுக்கு வழிவிடக்கூடுமென்று உலக நாடுகள் பல துணிந்து கூறியிருப்பதையும் அரசியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அமெரிக்க அதிபரின் அறிவிப்பைக் கண்டித்த துருக்கியின் அதிபர், ஜெருசலத்தை இஸ்ரேலின் தலை நகராக ஆக்குவதற்கு வாஷிங்டன் அதிகாரபூர்வமாக அங்கீகாரம் வழங்கினால், இஸ்ரேலுடனான உறவு களைத் தான் துண்டித்துக்கொள்ளப்போவதாகக் கூறி இருக்கிறார்.
அமெரிக்க அதிபரின் அந்த அறிவிப்பு வெளியான நாளிலேயே மத்திய கிழக்கின் பல வட்டாரங்களில் அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் கிளர்ந்து எழுந்ததாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனர்களும் சமரச பேச்சின் வழி முடிவு செய்ய வேண்டிய பிரச்சினைக்கு வாஷிங்டன் முடிவெடுப்பதை பெரும்பாலான உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஜெருசலத்தில் எந்த உலக நாடும் தூதரகத்தை வைத்திருக்கவில்லை என்பதையும் அரசியல் கவனிப்பாளர்கள் சுட்டிக்காட்டினர். அமெரிக்காவின் பல நட்பு நாடுகள் ஜெருசலம் தொடர்பாக பல்லாண்டு காலமாக அமெரிக்கா பின்பற்றி வந்த கோட்பாட்டை டிரம்ப் மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் வாஷிங்டனின் அறிவிப்பை வரவேற்றுள்ளது. அதுவே அமைதிக்கான வழி என்றும் இஸ்ரேலிய பிரதமர் நெட்டன்யாகு கூறி உள்ளார்.
டெல் அவீவில் உள்ள தற்போதைய அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலத்துக்கு மாற்றப் போவதாகவும் அமெரிக்க அதிபர் கூறியதுதான் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. அமெரிக்க அதிபரின் தேசிய பாதுகாப்பு வரைவுத் திட்டம் அரசியல் தந்திரமிக்க ஒன்றாக இருக்குமென்று கருதப்படுகின்றது.
அதில் திரு டிரம்ப் கையெழுத்திட்டால் அது இதுகாறும் அமெரிக்க நிர்வாகம் கட்டிக்காத்துவந்த தலையிடாமை போக்கில் ஒரு மாற்றம் ஏற்படப் போவதையே மறைமுகமாகத் தெரிவிக்கிறது என்று உலகத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்க அதிபரின் தேசிய பாதுகாப்பு வரைவுத் திட்டத்துக்கு அரபு நாடுகள் ஆதரவு தரப்போவதில்லை என்பது உறுதி.
அவ்வாறு செய்தால் பல ஆபத்தான விளைவுகள் நேரப்போவது உண்மை என்று அரபு நாடுகள் எச்சரித் திருப்பதையும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். இந்நிலவரத்தை உலகம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.