சென்னை: நாட்டில் கலவரத்தை உண்டாக்கும் வேலையில் ஈடுபட பாஜக, சங்பரிவார் கும்பல் திட்டமிட்டுள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். எச்.ராஜா தொடர்ந்து வன்முறை, வெறித்தனப் பேச்சுகளில் ஈடுபட்டு வருவதாகச் சாடியுள்ள அவர், இந்த சந்தர்ப்பத்திலாவது ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், பகிரங்கமாக வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியிருக்கும் எச்.ராஜாவை தமிழக அரசு உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றார்.
பெரியார் சிலை உடைக்கப்பட வேண்டும் என்ற எண்ணமே உடைக்கப்பட வேண்டும் என்றும் பெரியார் சிலையில் கை வைத்தால் தேனீக்கூட்டில் கைவைத்த கதையாகிவிடும் என்றும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சிலையாக மட்டுமில்லாமல், தமிழக மக்களின் சிந்தையிலும் என்றென்றும் நிலைத்திருக்கும் சமூக நீதியின் தலைமகன் தந்தை பெரியார் சிலை தமிழகத்தில் இடிக்கப்படும் என ஆணவத்தோடு கருத்து தெரிவித்துள்ள எச்.ராஜாவைக் கண்டிப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மேலும் பல தலைவர்களும் பிரமுகர்களும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். தந்தை பெரியார் குறித்த கருத்துக்காக எச்.ராஜாவைக் கைது செய்ய வேண்டும் என நாகையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் சில இடங்களில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து, இத்தகைய செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். நாகையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.