ஆடவர் ஒருவர் பதிவுத் திருமணம் செய்துகொண்ட பிறகு பெண்ணாகப் பாலின மாற்றம் செய்துகொண்டதால் அவரது திருமணத்தைத் திருமணப் பதிவகம் ரத்து செய்தது. திருமணம் செய்துகொண்ட அந்தத் தம்பதியர் திருமணப் பதிவகத்தின் நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளனர். 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திருவாட்டி பிரிஸ் வோல்ட்டாவைக் கரம் பிடிக்க ஃபேத் வோல்ட்டா பதிவு செய்தபோது அவர் ஆடவராக இருந்தார். பதிவுத் திருமணத்துக்கு முன்பு ஃபேத்தின் தோற்றத்தையும் பெயரையும் கவனித்து திருமணப் பதிவாளர் அக்கறை தெரிவித்தார். தாம் ஒரே பாலினத்தவரைத் திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை என்றும் திருமண நாளுக்கு முன்பு தாம் பாலின மாற்றம் செய்துகொள்ளப் போவதில்லை என்றும் ஃபேத் அப்போது உறுதி அளித்திருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதியன்று ஃபேத்-பிரிஸ் பதிவுத் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, 2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் ஃபேத் பாலினம் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு பெண்ணாக மாறினார். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அவருக்குப் புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. அதில் அவரது பாலினம் பெண் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஃபேத்-பிரிஸ் தம்பதியரின் திருமணம் ரத்து செய்யப்பட்டது.