சரன்ஸ்க்: ஈரானுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி நேரத்தில் தவறிழைத்து பெனால்டியை விட்டுக் கொடுத்ததுடன், தனக்குக் கிட்டிய பெனால்டி வாய்ப்பிலும் கோலடிக்க தவறியதால் வெற்றியை இழந்த போர்ச்சுகல், 'பி' பிரிவில் இரண்டாமிடத்துடன் முடித்தது. இதனால் காலிறுதிக்கு முந்திய சுற்றில் போர்ச்சுகல் வலுவான உருகுவேயை எதிர்த்தாட வேண் டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. முற்பாதியில் ரிக்கார்டோ குரெஸ்மா அடித்த அற்புதமான கோலால் போர்ச்சுகல் அணி 1-0 என்ற முன்னிலையுடன் இடை வேளைக்குச் சென்றது.
இரண்டாம் பாதியின் ஐந்தாவது நிமிடத்திலேயே அம்முன்னிலையை இரட்டிப்பாக்க அருமையான வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், அவ்வணியின் தலைவர் கிறிஸ்டி யானோ, இம்முறை பெனால்டியில் கோட்டைவிட்டு ஏமாற்றமளித்தார். பெனால்டி வாய்ப்பின் மூலம் அவர் உதைத்த பந்தை வலைக்குள் புகவிடாமல் தடுத்தார் ஈரானிய கோல்காப்பாளர் பெய்ரன்வேண்ட்.
ஈரானிய வீரரின் முகத்தில் ரொனால்டோ (நடுவில்) முழங்கையால் இடித்தது காணொளியில் தெளிவாகத் தெரிந்ததால் மஞ்சள் அட்டை காட்டி அவரை எச்சரிக்கும் நடுவர். படம்: ராய்ட்டர்ஸ்