வாஷிங்டன்: விமானங்கள் இயக்கப்படும்போது பொதுவாக அதிக அளவிலான இரைச்சல் சத்தம் ஏற்படும். வானிலிருந்து தரையிறங்கும் விமானத்தில் இருந்து வரும் ஒலியை நிலத்தில் இருந்தே கேட்க முடியும். அப்படி இருக்கையில், விமான நிலையத்திற்கு அருகில் வசிப்பவர்கள் இந்த இரைச்சல் சத்தத்தினால் அதிக அளவில் பாதிப்பு அடைகின்றனர். விமானத்தில் செல்லும் பயணிகளுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும். இந்நிலையில், விமானம் இயக்கப்படும்போது ஏற்படும் இரைச்சல் ஒலியைக் குறைக்க அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் (நாசா) நீண்டகாலமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தது.
பல்வேறு சோதனைகளுக்குப் பின் தற்போது குறிப்பிடத்தக்க வெற்றியை எட்டியுள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்து உள்ளது. நாசாவின் சோதனை விமானங்களில் நடத்தப்பட்ட பல்வேறு மாற்றங்களுக்குப் பின் அவை இயக்கப்பட்டபோது இரைச்சல் ஒலி 70 விழுக்காடு குறைந்து உள்ளதாகவும் இதற்காக விமான அமைப்பில் மூன்று தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்துள்ளதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.