தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து மனம் திறந்துள்ளார் பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத். இந்தி திரையுலகைச் சேர்ந்த கதா நாயகர்கள் மீது அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திரையுலகில் பாலியல் தொல்லை கள் ஏற்படுவதாக ஹாலிவுட் முதல் போலிவுட் வரை பலரும் வெளிப் படையாகப் பேசி வருகின்றனர். அண்மையில் ஹாலிவுட் நடிகைகள் பாலியல் தொல்லை குறித்து பேசத் துவங்கியது முதல் இந்தி நடிகைகளும் வெளிப்படையாக இத்தகைய புகார்களை எழுப்பி வருகின்றனர். இந்தியில் 'மர்டர்' படம் மூலம் அறிமுகமானவர் மல்லிகா ஷெரா வத். அப்போது வயதான ஒருவரது பிடியில் சிக்கிக் கொண்டு தாம் மிகவும் சிரமப்பட்டதாக தற்போது கூறியுள்ளார். தமக்கு யாருமே உதவவில்லை என்றும், தனித்து விடப்பட்டதாக உணர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
"இந்திப் படங்களில் என்னுடன் நடித்த கதாநாயகர்கள் பாலியல் தொல்லைகள் கொடுத்தனர். காட்சிகளில் நெருக்கமாக நடிப்பது போல், நிஜத்திலும் இருக்கலாமே என்று அழைப்பு விடுத்தனர். "ஆனால் அவர்களின் இந்த வற்புறுத்தலுக்கு இணங்க மறுத்துவிட்டேன். இதனால் அவர்களுடைய படங்களில் இருந்து என்னை நீக்கிவிட்டனர். "இயக்குநர்கள் சிலர் நள்ளிரவில் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொல்லை செய்த சம்பவங்களும் நடந்துள்ளன. நான் அவர்களுக்கு உடன்பட்டு இருந்தால் நிறைய பட வாய்ப்புகள் கிடைத்திருக்கும்," என்று மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளார். தம்மால் சிலரது விருப்பத்துக்கு இணங்கிச் செல்ல இயலாது என்று குறிப்பிட்டுள்ள அவர், தமக்கு தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் உள்ளதாக கூறியுள்ளார்.
"பட வாய்ப்புக்காக படுக்கையைப் பகிர மாட்டேன். கதாநாயகர்களும், இயக்குநர்களும் எனக்குத் தொல்லைகொடுத்ததை வெளியே சொன்னால் பழியை என் மீது திருப்பி விடுவார்கள் என்ற பயம் இருந்தது. அதனால் தான் இதை முன்பே சொல்லவில்லை," என்று கூறியுள்ளார் மல்லிகா ஷெராவத்.
அண்மையில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலியல் தொல்லைக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் ஒரு கூண்டுக்குள் தன்னை அடைத்துக்கொண்டு மல்லிகா ஷெராவத் நூதன போராட்டம் நடத்தினார்.