சிங்கப்பூரில் மூப்படைவோர் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது. எனவே முதியோர் பராமரிப்பில் அரசாங்கம் பல வழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. மூத்தோர்களைப் பராமரிக்க பல சேவைத் திட்டங்கள் நடப்பில் உள்ளன. அவற்றில் சில: வீட்டுக்கு அருகே உதவி நிலையம்: சில வாடகை வீடுகளில் வசிக்கும் முதியோர்களுக்கு, அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகேயுள்ள மூத்தோருக்கான செயல்பாட்டு நிலையங்கள் உதவி வழங்கி வருகின்றன. குளிப்பது, வீடுகளைச் சுத்தமாக வைத்துக் கொள்வது போன்ற அன்றாடச் செயல்பாடுகளுக்கு அவை உதவி வருகின்றன. அத்துடன் தனித்து வாழும் நோய்வாய்ப்பட்ட முதி யோர்களின் உடல்நிலையையும் கண்காணித்துக் கொள் ளும் பணியையும் செய்து வருகின்றன.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் நலிவுற்ற நோயாளிகளுக்குப் பராமரிப்புச் சேவை: மருத்துவ மனையில் இருந்து வீட்டிற்குத் திரும்பும் நலிவுற்ற நோயாளிகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலத் திற்கு பலதரப்பட்ட பராமரிப்புச் சேவைகள் வழங்கப்ப டு கின்றன.
நலிவுற்ற மூத்தோரை எவ்வாறு நன்முறையில் கவனித்துக்கொள்ளலாம் என்பது போன்ற பயிற்சியும் அவற்றில் அடங்கும். வலியால் அவதிப்படும் நோயாளிகளைப் பராமரித்தல்: வலி வேதனையால் துடிக்கும் நாள்பட்ட நோய் அல்லது தீரா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கான கவனிப்பு. இதன் நோக்கம் நோயால் அவதிப்படுவோரின் வாழ்க்கையைச் செம்மைப்படுத்துதல்.
நீங்கள் தனித்து வாழ்வதாக இருந்தாலும் சரி உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்வதாக இருந்தாலும் சரி, வயதான காலத்திலும் நோய்வாய்ப்பட்டு நலிவடைந்த காலத்திலும் உங்களுக்கு உதவ இந்தத் திட்டம் வழிவகுக்கிறது. உடல் நோவால் அவதிப்படுபவர்களுக்கு இல்லக் கவனிப்புச் சேவைத் திட்டமும் உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் நோயாளிகளை அவர்களின் வாழ்நாள் முழுதும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று கவனித்து, அவர்களுக்குத் தேவையான சிகிச்சையும் மருந்தும் வழங்கப்படும். ஏராளமான அறநிறுவனங்கள் இந்தச் சேவைக்கு கட்டணம் வசூலிப்பதில்லை. இருப்பினும் இச் சேவைக்கு மாதக் கட்டணம் சுமார் $1,000 வசூலிக்கப்படுகிறது. உதவித் தொகை தகுதி பெறுவோர் $800 உதவித் தொகை பெறலாம். பகல் நேரப் பராமரிப்புச் சேவை: குடும்ப உறுப்பினர்கள் வேலைக்குச் செல்லும்போது தனியாக இருக்கும் முதியோருக்குச் சரியான நேரத்திற்கு உணவும் மருந்தும் கொடுத்து கவனித்துக்கொள்ளும் சேவை.
மறதி நோயாளிப் பராமரிப்புச் சேவை: மறதி நோயால் அவதிப்படுவோரைக் கவனித்துக் கொள்ளும் சேவையில், உடற்பயிற்சி, மனப்பயிற்சி ஆகியவற்றின் மூலம் மறதி நோயைக் கட்டுப் படுத்தும் சிகிச்சை அளிக்கப்படும். சமூக மறுவாழ்வு மையம்: கைகால் முறிவு, கை, கால் அகற்றப்பட்டோர், பக்கவாதத்தால் பாதிக்கப் பட்டோருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் தொழில்வழி மற்றும் இயன் மருத்துவம் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படும்.
இல்லப் பராமரிப்பு: இயலாத முதியோருக்கு பகல் நேரக் கவனிப்புச் சேவை போன்று இந்தத் திட்டத்திலும் வீட்டிற்கே வந்து தாதிமை, மருத்துவ சேவை வழங்குதல் மற்றும் குளிப்பாட்டுதல், வீட்டைக் கவனித்துக்கொள்ளுதல் போன்ற சேவைகளும் இதில் அடங்கும். மருத்துவர் வருகைக்கான கட்ட ணம் $250 ($200 வரை உதவித்தொகை), தாதியருக் கான கட்டணம் 110 ($90 வரை உதவித்தொகை). ஒருங்கிணைக்கப்பட்ட இல்ல மற்றும் பகல்நேர பராமரிப்பு: மூத்தோரின் தேவையைப் பொறுத்து இல்ல மற்றும் பகல்நேரக் கவனிப்புச் சேவை வழங்கப்படுகிறது.
துடிப்புடன் மூப்படைவோருக்கான பராமரிப்புச் சேவை நிலையங்கள்: ஆரோக்கியத்துடன் இருக்கும் மூத்தோருக்கும் நலிவுற்ற மூத்தோருக்கும் இங்கு சேவை வழங்கப்படுகிறது. அவர்கள் துடிப்புடன் மூப்படைவதற்கும் தன்னிச்சையாகச் செயல்படுவதற் கும் இந்நிலையங்கள் உதவி வருகின்றன. இப்போது வாம்போ மற்றும் கம்போங் அட்மிரால்டி ஆகிய இடங்களில் உள்ள இரண்டு நிலையங்கள் இச் சேவையை வழங்கி வருகின்றன.
மருத்துவத் துணை மற்றும் போக்குவரத்துச் சேவை: மருத்துவமனைகளுக்குத் தன்னிச்சையாகச் செல்ல இயலாத மூத்தோரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல இச்சேவை வழிசெய்கிறது. வெளிநாட்டுப் பணிப்பெண்கள்: 65 வயதுக்கு மேற்பட்ட மூத்தோர் தங்களைக் கவனித்துக்கொள்ள பணிப்பெண் அமர்த்தினால் வழக்கமான மாதத் தீர்வை $265க்குப் பதில் $60 கட்டினால் போதும். குடும்ப தனிஆள் வருமானம் $2,600க்கு மேல் போகாமல் இருந்தால் அரசாங்கம் $120 வழங்கும். இடைக்கால பராமரிப்புச் சேவை: குடும்பத்தினர் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது தாதிமை இல்லத்தில் வைத்துக் கவனித்துக்கொள்ளும் சேவை.
இதுபோன்ற பலதரப்பட்ட சேவைகளை நோய்வாய்ப் பட்ட முதியோருக்காக அரசாங்கம் வழங்கி வருகிறது. தாதிமைச் சேவை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுதல், வீட்டில் வந்து கவனித்துக்கொள்ளுதல் போன்ற சேவைகள் நடப்பில் உள்ளன. பணம் கொடுத்து இந்தச் சேவைகளைப் பெறமுடியாத குறைந்த வருமானக் குடும்பத்தினருக்கு உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.