மாஸ்கோ: இப்புவியிலேயே ஆகச் சிறந்த காற்பந்துக் குழு எனும் பெருமையை பிரான்ஸ் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி யின் இறுதி ஆட்டத்தில் குரோவேஷி யாவை அது 4=2 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி கிண்ணம் ஏந்தியது. இதற்கு முன்பு 2014ஆம் ஆண்டிலும் 2010ஆம் ஆண்டிலும் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதி ஆட்டங்கள் கோல் ஏதுமின்றி முடிந்து கூடுதல் நேரத்துக்குச் சென்றன. எனவே இவ்வாண்டின் இறுதி ஆட்டத்தில் கோல் மழை பொழியும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆட்டம் தொடங்கியதும் தாக்குதலில் மும்முரம் காட்டியது இறுதி ஆட்டத்துக்கு முதல்முறையாக தகுதி பெற்ற குரோவேஷியா.
ஆனால் 18வது நிமிடத்தில் பிரான்சுக்கு ஃப்ரீகிக் வாய்ப்பு கிடைத்தது. ஆன்ட்டுவான் கிரீஸ்மன் பெனால்டி எல்லைக்குள் அனுப்பிய பந்துக்காக இருதரப்பு வீரர்களும் முட்டி மோதினர். பிரான்ஸ் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீச, குரோவேஷிய வீரர் மன்சுகிச்சின் தலையில் பட்ட பந்து வலைக்குள் புகுந்து சொந்த கோலானது. இருப்பினும், மனம் தளராமல் போராடிய குரோவேஷியா அடுத்த பத்து நிமிடங்களில் கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தது. பிரெஞ்சு பெனால்டி எல்லை அருகில் பந்தைத் தமது கட்டுக்குள் கொண்டு வந்த பெரிசிச் மிக அருமையாக கோல் போட்டார்.
ஆனால் குரோவேஷியாவின் கொண்டாட்டம் நீடிக்கவில்லை. கோல் நாயகனாக இருந்த பெரிசிச் அடுத்த சில நிமிடங்களிலேயே வில்லனாக மாறினார். ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் பிரான்சுக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் அனுப்பப்பட்ட பந்து பெரிசிச்சின் கையில் பட்டது.
உலகக் கிண்ணம் ஏந்தும் பிரான்ஸ் குழுவின் கோல்காப்பாளரும் அணித் தலைவருமான லோரிஸ். அவருடன் இணைந்து கொட்டும் மழையில், கொண்டாட்டத்தில் நனையும் பிரெஞ்சு வீரர்கள்.