தீவின் கிழக்கு, வடக்கிழக்குப் பகுதிகளில் கடன் முதலை பிரச்சினை தொடர்பில் தொந்தரவு விளைவித்த 15 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். பிடோக் சவுத், தெம்பனிஸ், செங்காங், சிராங்கூனில் உள்ள லோரோங் லியு லியன் ஆகிய பகுதிகளில் இம்மாதம் 6ஆம் தேதிக்கும் 8ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் கடன் முதலை தொல்லை கொடுக்கப்பட்டது குறித்து தனக்கு தகவல் கிடைத்ததாக போலிஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
பல்வேறு வீடுகளின் வாயில்களில் சாயம் தெளிக்கப்பட்டதாகவும் அவை சைக்கிள் பூட்டுகளால் பூட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கடன் தொடர்பான குறிப்புகளும் விட்டுச்செல்லப்பட்டன. போலிஸ் கண்காணிப்புக் கருவிகளின் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்ட பிறகு பிடோக் போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அந்தப் பதின்ம வயது பெண்ணின் அடையாளத்தை உறுதி செய்தனர். தெம்பனிஸ் ஸ்த்ரீட் 21ல் அந்தப் பெண் பிடிபட்டார். அவர் வைத்திருந்த கைபேசி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை தொடர்கிறது. கடன் முதலை தொல்லை விவகாரத்தில் முதன்முறையாக குற்றம் புரிவோருக்கு $50,000 வரை அபராதமும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகள் வரையும் விதிக்கப்படலாம்.