கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கு முன், குடும்பத்துடன் தென் கொரியாவுக்குச் செல்வதாக இருந்த திரு எழில் மதியன் தமது மலக் கழிவில் ரத்தம் இருந்ததை உணர்ந்தார். விடுமுறைக்குப் பிறகு மருத் துவப் பரிசோதனைக்குச் சென்ற வருக்குப் பெருங்கூடல் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. 52 வயதில் அவருக்கு உலகமே தலைகீழாய் நின்றது. மேற்கொண்டு சிகிச்சையில், ஆண்விதை புற்றுநோயும் தமக்கு இருப்பது தெரிய வந்தது. வாழ்நாள் முழுக்க 'ஸ்டோமா' பை உடலில் பொருத்தப்பட வேண்டும் என்பது மூன்றாவது அதிர்ச்சி. இந்த 'ஸ்டோமா' பை பெருங்குடல் புற்றுநோய் நோயாளி கள் சிலருக்கு உடலில் இருந்து மலம் வெளியேற அவர்களின் வயிற்றுப் பகுதியில் போடப்படும் துளையாகும். "வாழ்க்கையே பாழாகிப்போனது போன்ற உணர்வு என்னைத் தாக்கியது. ஆனால் ஏன் இப்படி எனக்கு நடந்தது என்ற எண்ணம் தோன்றவில்லை.
ஏனெனில் எனது வாழ்க்கை முறையும் அப்போது ஆரோக்கியமற்றதாக இருந்தது," என்று அத்தருணத்தை நினைவுகூர்ந்தார் திரு எழில். சோகத்தில் முடங்கிக் கிடந் தால் குணமாவது கடினம் என்பதை உணர்ந்து இதிலிருந்து மீள வேண்டும் என்ற முனைப்புடன் சில மாதங்களுக்கு கதிரியக்க, ரசாயன சிகிச்சைகளை மேற் கொண்டார். சிகிச்சைகளின்போது, சாப்பிட விருப்பம் இருக்காது; எளிதில் எரிச்சல் ஏற்படும்; காலின் தோல் பகுதி பாதிக்கப்படும் என்பதால் நடப்பதற்கும் சிரமமாக இருந்தது. இருப்பினும், குடும்ப உறுப் பினர்கள், நெருங்கிய நண்பர், உலோக மறுபயனீடு நிறுவனத்தில் வேலை செய்த சக ஊழியர்கள் ஆகியோர் அவருக்குப் பக்க பலமாக இருந்ததால் எதிர்நீச்சல் போட துணிந்தார்.
2011ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து சிகிச்சைகளும் முடிந்து இரட்டிப்பு புற்றுநோயையும் கடந்த வாழ்வு உடல்நலம் தேறி வந்தது. "தொடக்கத்தில் 'ஸ்டோமா' பையுடன் எந்நேரமும் இருப்பது சிரமமாக இருந்தது. ஆனால் என்னைப் போன்று 'ஸ்டோமா' பையைப் பொருத்திக்கொண்ட சீன முதியவர் ஒருவர் கூடைப்பந்து, நீச்சல், மெதுவோட்டம், பூப்பந்து போன்ற நடவடிக்கைகளில் ஈடு படுவதை நாளிதழில் படித்த பிறகு எனக்குள் உற்சாகம் ஏற்பட்டது," என்று கூறினார் 59 வயது திரு எழில்.
திரு எழில் முதலில் நீச்சலுடன் தொடங்கினார். நாளடைவில் தன்னம்பிக்கை அதிகரிக்க, 'காயாக்கிங்', கடல்நாகப் படகு விளையாட்டு, நெடுந்தொலைவு ஓட்டம், 'ஸும்பா' போன்ற நடவடிக்கைகள் இவருக்கு அத்துபடி ஆனாது. துடிப்பான வாழ்க்கையைக் கடைப்பிடிக்கும் அதே சமயம், சிங்கப்பூர் பொது மருத்துவமனை, சிங்கப்பூர் புற்றுநோய் சங்கம் ஆகியவற்றின் புற்றுநோய் ஆதரவுக் குழுக்களில் இடம்பெற்று மற்றவர்களுக்கு ஒரு முன்னுதார ணமாக விளங்கி அவர்கள் நோயிலிருந்து மீள உதவி செய்து வருகிறார். சிங்கப்பூர் செயற்கை துளைப்பு சங்கத்தை (Ostomy Association of Singapore) உருவாக்க பாடுபட்டு 'ஸ்டோமா' பையுடன் வாழ்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார்.
தற்போது 16 பேருடன் இணைந்து மங்கோலியாவில் உள்ள கோபி பாலைவனத்தில் ஆறு நாட்களுக்கு ஒவ்வொருவரும் 100 கிலோ மீட்டர் தூர நடை மேற்கொண்டு சிங்கப்பூர் புற்றுநோய் சங்கத்திற்கு $100,000 நிதி திரட்டும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார்.
"கோபி பாலைவனத்தில் வெப்ப நிலவரத்தைக் கருத்தில்கொண்டு அங்கு நீண்ட தூரம் நடப்பதை ஒரு தனிப்பட்ட சவாலாகக் கருது கிறேன். புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தவர்கள் துடிப்பான வாழ்க்கையை மேற்கொள்ள முடியும் என்பதை அவர்களிடம் நிரூபிக்கவும் இதனை செய் கிறேன்," என்றார் திரு எழில். நிதி ஆதரவு வழங்க விரும்புவோர், https://singapore cancersociety.give.asia/campaign/ braving_1000km_of_brutal_ gobi_climate_for_cancer என்ற இணையப் பக்கத்திற்குச் செல்லலாம்.
சுகாதாரப் பராமரிப்பாளர்கள், புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரை உள்ளடக்கும் குழுவுடன் மங்கோலிய பாலைவனத்தில் நடந்து நிதி திரட்ட முனைந்துள்ளார் திரு எழில் (இடது). இக்குழுவினர் ஆகஸ்ட் 3ஆம் தேதி சிங்கப்பூர் திரும்புகின்றனர். படம்: திரு எழில் மதியன்