சாயிஷா மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்படுகிறார். அந்த மகிழ்ச்சிக்குக் காரணம் அவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்திருக்கும் 'கடைக்குட்டி சிங்கம்', 'ஜுங்கா' படங்கள்தான். மும்பைவாசியான சயிஷா தற்பொழுது சென்னையில் குடிகொண்டு இருக்கிறார். அதனால் சென்னைவாசிகள் மீது மிகவும் அன்புடனும் அக்கறையுடனும் இருக்கிறார். 'கடைக்குட்டிச் சிங்கம்' படத்தில் நடித்த பிறகு தமிழ்நாட்டு மக்களின் மீது அன்பு அதிகமாகி இருக்கிறது.
"கிராமத்தில் இருப்பவர்கள் இந்த அளவுக்கு அன்புடன் இருப்பார்கள் என்று நான் நினைத்து பார்க்கவில்லை. அன்பால் என்னைத் திக்குமுக்காட வைத்துவிட்டார்கள். "கடைக்குட்டிச் சிங்கம்' படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் கண்ணுக்கினியாள். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என் ரசிகர் ஒருவர் தன் குழந்தைக்கு அந்தப் பெயரை வைத்திருப்பதாகச் சொன்னபோது நெகிழ்ந்துவிட்டேன்.
வெளியில் இருந்துகொண்டு விவசாயம் அழிந்துகொண்டு இருக்கிறது; விவசாயிகள் பாவம் என்று கவலைப்படுவதோடு நிறுத்திக்கொள்கிறோம். "விவசாயமும் விவசாயிகளும் இல்லை என்றால் மனித வாழ்க்கையே இல்லை என்பதை உணர்வுபூர்வமாக அனுபவித்து எடுத்த படம் இது. விவசாயிகளின் அருமையைப் புரிய வைத்த படமும்கூட," என்று படத்தைப் புகழ்ந்து தள்ளுகிறார் சாயிஷா. விட்டால் விவசாயிகள் சங்கத்தின் மகளிரணித் தலைவியாகி விடுவார்போலத் தோன்றுகிறது.